உள்ளூராட்சி சபைத் தேர்தல் – தபால்மூல வாக்களிப்பு ஆரம்பம்

 


இலங்கையில் 2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்நிலையில், இன்று (24) முதல் தபால்மூல வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியுள்ளது.

தபால்மூல வாக்களிப்பு 24, 25, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணி வரை நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் சீரான நடைமுறை

யாழ்ப்பாண மாவட்டம் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறும் உள்ளூர் அதிகார சபைத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டு, நிறைவேறும் தருவாயில் உள்ளன.

தேர்தல் விவரங்கள்:

யாழ்ப்பாண மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் 243 வட்டாரங்களில் தேர்தல் நடைபெறுகிறது. 3 ஆயிரத்து 519 உறுப்பினர்கள் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களின் சார்பில் போட்டியிடுகின்றனர்.

இதன்படி, யாழ்ப்பாணத்தில் 517 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன, மேலும் 4 இலட்சத்து 98 ஆயிரத்து 140 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். தபால்மூல வாக்களிப்புக்காக விண்ணப்பிக்கப்பட்ட 21 ஆயிரத்து 64 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன.

வவுனியா மற்றும் வன்னி மாவட்டங்களிலும் செயல்பாடு

வவுனியா மாவட்டத்தில் தபால்மூல வாக்களிப்பு சுமுகமாக நடைபெற்று வருகிறது. வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது வாக்குகளை அளித்துள்ளனர். வவுனியாவில் 5,550, முல்லைத்தீவில் 3,807, மற்றும் மன்னாரில் 3,792 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த வன்னி தேர்தல் மாவட்டத்தில் மொத்தம் 13,149 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.