10 வயது சிறுமியிடம் பாலியல் சேட்டை செய்த முதியவர் கைது! - யாழில் சம்பவம்
யாழ்ப்பாணம் வேலணை துறையூர் பகுதியில், 10 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தியதாக 62 வயதுடைய கடை உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை (19), துறையூர் கடற்றொழில் சங்கத்துக்கு அருகிலுள்ள கடைக்கு சிறுமி ஜூஸ் வாங்கச் சென்ற போது இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. ஜூஸை குளிரூட்டியில் இருந்து எடுக்கும்படி கூறிய கடை உரிமையாளர், சிறுமி ஜூஸ் எடுக்க முயன்றபோது பின்புறமாக கட்டியணைத்து பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.
பதற்றமடைந்த சிறுமி வீடு திரும்பி, சம்பவத்தை தனது தாயிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் சமுதாய மனப்பான்மை மற்றும் அயலவர்களின் விமர்சனங்களை அஞ்சிய தாயார், முதலில் புகார் செய்ய தயங்கியுள்ளார்.
பின்னர், சமூக நலன்விரும்பிகளின் தலையீட்டின் மூலம், கடந்த 23ஆம் திகதி கிராம உத்தியோகத்தரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு, 24ஆம் திகதி வேலணை பிரதேச செயலகத்தின் சிறுவர் நன்னடத்தை அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இதே தினத்தில் ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் அதிகாரப்பூர்வ முறைப்பாடும் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நடவடிக்கை எடுத்த பொலிஸார், நேற்று (25) பிற்பகல் சந்தேக நபரை கைது செய்தனர். அவரை நீதிமன்றில் முறையின்படி முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
